பல்கலைக்கழக பணியிட வெற்றிடங்களை துரிதமாக நிரப்ப துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தல்

 


நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் வெற்றிடமாக உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா பணியிடங்களை விரைவாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உயர் கல்வி ஆலோசனைக் குழுவின் முன்னிலையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வெற்றிடமாக உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா பணியிடங்களை நிரப்புவதற்கான அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சில பல்கலைக்கழகங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பிரதி அமைச்சர், குறித்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்தர்களிடம் கோரியுள்ளார்.

தற்போது இலங்கையில் மொத்தம் 19 அரச பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.