இலங்கையில் சிறுவர் உழைப்பை முற்றிலும் ஒழித்து, அனைத்துச் சிறுவர்களுக்கும் கட்டாயக் கல்வி.

 

பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் வேலைவாய்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சிறுவர் உழைப்பைத் தடுக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் முதன்மை நிறுவனமாகத் தொழிலாளர் திணைக்களம் செயற்ப்பட்டு வருகிறது. இது தொடர்பான விவரங்களை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்
சரோஜா சாவித்திரி போல்ராஜ் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

சட்டத் திருத்தங்கள் மற்றும் முக்கிய அம்சங்கள்

1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் சிறுவர் உழைப்பு தொடர்பான குற்றங்களுக்கான அபராதத் தொகையைத் திருத்துவதே இந்த சட்டமூலத்தின் முதன்மை நோக்கமாகும்.

இதன்படி, இதுவரை நடைமுறையிலிருந்த 10,000 ரூபாய் அபராதத் தொகை 1,00,000 ரூபாய் வரை உயர்த்தப்படவுள்ளதுடன், நீதிமன்றங்களால் விதிக்கப்படும் ஏனைய தண்டனைகளுக்கும் இது உட்பட்டதாகும்.

2021 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்கச் சட்டத் திருத்தத்தின்படி, சிறுவர்களை வேலையில் அமர்த்துவதற்கான தடை செய்யப்பட்ட வயது வரம்பு 14 லிருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது அவர்களின் கட்டாயக் கல்வி வயதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஆபத்தான, அபாயகரமான, பாதுகாப்பற்ற அல்லது அவர்களின் சுகாதாரம், கல்வி மற்றும் நன்னடத்தைப் பாதிக்கும் தொழில்களில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

சிறுவர்களை ஈடுபடுத்தத் தடைசெய்யப்பட்ட தொழில் துறைகளின் எண்ணிக்கை 51 இலிருந்து 71 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பற்ற வீட்டு வேலைகள், தொழிற்சாலைகள், சுரங்கங்கள், ஆழ்கடல் பகுதிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் உடற்பிடிப்பு (Spa) போன்ற நிலையங்கள் அடங்கும்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) 138 மற்றும் 182 ஆகிய உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ள இலங்கை, நாட்டில் சிறுவர் உழைப்பை முற்றிலும் இல்லாதொழிக்கும் நோக்கில் இந்நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சிறுவர் நலன் மற்றும் அரசின் நலத்திட்டங்கள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியை உறுதி செய்ய 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதுடன், சீருடைகள், பாடநூல்கள், காலணி வவுச்சர்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

3 முதல் 5 வயது வரையிலான முன்பள்ளிக் குழந்தைகளின் சத்துணவுக்காக ஒதுக்கப்படும் தொகை 60 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனடையும் குழந்தைகளின் எண்ணிக்கை 1,65,000 ஆக அதிகரித்துள்ளது.

சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் வாழும் சுமார் 10,000 சிறுவர்களில், பிறப்புச் சான்றிதழ் இல்லாத சுமார் 4,000 பேருக்குத் தோராயமான வயதுச் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறுவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவை தேசிய சேமிப்பு வங்கிக் கணக்கில் வைப்பு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கையில் சிறுவர் உழைப்பை முற்றிலும் ஒழித்து, அனைத்துச் சிறுவர்களுக்கும் கட்டாயக் கல்வியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதே அரசின் முதன்மை நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.