ஒட்டிப் பிறந்த, இரட்டையர்கள், ஐந்து வருடங்களுக்கு பின்னர் வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அறுவை சிகிச்சை பேராதனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேராதனை போதனா வைத்தியசாலை, சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட குழந்தைகள் வைத்தியசாலை மற்றும் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சையின்போது, ஒட்டிப்
பிறந்த இரட்டையர்களான லினுலி தருல்யா மற்றும் லித்துலி மனுல்யாவை
தனித்தனியாக வெற்றிகரமாக பிரித்தனர்.
மாவனெல்ல, அரநாயக்கவில் 2021ஆம் ஆண்டு பிறந்த இந்த இரட்டையர்கள், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிபுணர்களின் நெருங்கிய கண்காணிப்பில் இருந்து வந்தனர்.இந்தக் காலகட்டத்தில், மருத்துவக் குழுக்கள் இறுதிப் பிரிப்பு அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்பு, விரிவான ஆய்வுகள், திட்டமிடல் மற்றும் பல நடைமுறைகளை மேற்கொண்டனர்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் சிக்கலான குழந்தை மருத்துவ நடைமுறைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த அறுவை சிகிச்சையின் விளைவாக, அந்த இரட்டையர்கள் இரண்டு தனித்தனி குழந்தைகளாக வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் மருத்துவ வரலாற்றில் ஒரு பெரும் சாதனையாக பார்க்கப்படும் இந்தச் சம்பவம் இலங்கை மருத்துவ நிபுணர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவத்திற்காக பாராட்டுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





