நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது கைதிகள் அண்மையில் நடத்திய போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியது.
அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட இளம் பெண் ஒருவரின் முகம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், "இவ்வளவு அழகான ஒரு பெண் ஏன் சிறையில் இருக்கிறார்" என்ற கேள்வி பலரும் எழுப்பி வந்தனர்.
அந்தப் பெண்ணின் உருக்கமான உண்மைப் பின்னணியை புலனாய்வு பத்திரிகையாளர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த இளம் பெண், பதுளை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். சிறுவயதிலிருந்தே கல்வியில் சிறந்து விளங்கிய அவர், ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த சித்தியைப் பெற்று கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் இணைந்துள்ளார்.
நீர்கொழும்பில் உள்ள தனது உறவினரின் வீட்டில் தங்கிப் படித்து வந்த அவர், கல்வியில் மட்டுமல்லாது வலைப்பந்து விளையாட்டிலும் தேசிய மட்டம் வரை பல விருதுகளைப் பெற்று, பாடசாலை மாணவர் தலைவியாகவும் (Prefect) மிளிர்ந்துள்ளார்.
அவரது உயர்தரப் படிப்பு காலத்தின் போது, தோழிகளுடன் ஏற்பட்ட வாட்ஸ்அப் (WhatsApp) குழுவொன்றின் ஊடாக ஒரு இளைஞருடன் நட்பு ஏற்பட்டு, அது பின்னர் தீவிர காதலாக மாறியுள்ளது.
அந்தக் காதலை அப்பெண் கண்மூடித்தனமாக நம்பிய நிலையில், காதலன் அவரிடம் நீர்கொழும்பில் உள்ள தனது நண்பரிடம் இருந்து சில பொதிகளை பெற்று வருமாறு கேட்டுள்ளார்.
காதலன் மீதிருந்த அதீத நம்பிக்கையால், அந்தப் பொதிகளுக்குள் இருப்பது போதைப்பொருள் என்பதை அறியாமலேயே, அதனைப் பல இடங்களுக்கும் கொண்டு சேர்க்கும் கடத்தலில் அவர் பயன்படுத்தப்பட்டுள்ளார்.
இறுதியில், பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அந்த பெண் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் நீர்கொழும்பு சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் சிறைக்குள் இருந்த போதே, அவரது உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் அவர் அதீத புள்ளிகளைப் பெற்று மருத்துவப் பீடத்திற்குத் (Medical Faculty) தெரிவாகியிருந்த தகவல் தெரியவந்துள்ளது.
சிறைச்சாலை கூரையின் மீது ஏறி நின்று தனது உரிமைக்காகக் குரல் கொடுத்த அந்த மாணவியின் சோகக் கதை, தற்கால இளைய தலைமுறையினருக்கு ஒரு எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வாகவும் எடுத்துக் காட்டப்படுகின்றது.





