டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

 


நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,011 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.அதேவேளை, டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அந்த மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 17,395 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 16,294 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 5,639 பேரும், கண்டி மாவட்டத்தில் 5,634 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 5,355 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 4,553 பேரும், காலி மாவட்டத்தில் 4,534 பேரும் டெங்கு நோயாளர்களாகப் பதிவாகியுள்ளனர்.

மேலும், 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் முதல் 26 நாட்களில் மாத்திரம் 26,636 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 175 அதிக ஆபத்துள்ள பகுதிகள் இருப்பதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.