மட்டக்களப்பில் பாரம்பரிய கலைஞர்களுக்கான ஒன்று கூடல்.

 











மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் இணைந்து எற்பாடு செய்த பாரம்பரிய கலைஞர்களுக்கான ஒன்று கூடல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பாரம்பரிய கலைஞர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவில் உள்ள பாரம்பரிய கலைகளை வளர்த்து அடுத்த சந்ததியினருக்கு கற்றுக்கொடுக்கும் உண்ணத பணியில் ஈடுபடும் கலைஞர்களுக்கான ஒன்றுகூடலே இவ்வாறு இடம்பெற்றது.
இதன் போது உதவி மாவட்ட செயலாளர்
கருத்து தெரிவிக்கையில் எமது மண்ணிற்குரிய பாரம்பரிய கலைகளை வளர்த்து மக்களை மகிழ்விக்கும் கலைஞர்களை பாராட்டி மகிழ்விக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதன் போது வசந்தம் கும்மி, நாட்டுக்கூத்து , வடமோடி தென்மோடி கூத்து, வில்லுப்பாட்டு, சிற்பம், வர்மம், பொல்லடி, சிலம்பு, வால்வீச்சு, கரகம், உடுக்கை, மேளம், பறை, மத்தளம், நாட்டார் பாடல், காவியப்பாடல், தீப்பந்த வீச்சு, புல்லாங்குழல், டோக்கி போன்ற துறைகளில் ஈடுபம் கலைஞர்கள் கலந்து கொண்டு தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
கலாசார அலுவலர்கள் திணைக்களத்தினால் கலைஞர்களின் தரவுகளை இணையதளத்தில் பதிவு செய்து தேசிய ரீதியில் தம்மை இணைத்துக் கொள்வதுடன் கலைஞர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்படுவது தொடர்பாகவும் கலைஞர் ஒய்வூதிய திட்டம் பற்றியும் இதன் போது தெரிவித்தனர்.
இந் நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கலாசார அலுவலர்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டதுடன் கலைஞர்களினால் இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.