ஒரு தரப்பினர் மனித கடத்தல் வியாபாரிகளிடம் அகப்பட்டுக் கொள்கிறார்கள்-- மனுஷ நாணயக்கார

 


மனித கடத்தல்காரர்களிடம் அகப்படாமல் சட்ட வழிமுறைகளுக்கு அமைய வெளிநாடுகளுக்கு செல்லுமாறு பொதுமக்களிடம் வலியுறுத்துவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
 
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்..பி.ராஜிகா விக்கிரமசிங்க  முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர், 2020 ஆம் ஆண்டு 15,640  பெண்களும், 2021 ஆம் ஆண்டு 29,314 பெண்களும் , 2023 ஆம் ஆண்டின் மூன்று காலப்பகுதியில் 39,915 பெண்களும் வீட்டு பணிப் பெண்களாக மத்திய கிழக்கு உட்பட பெரும்பாலான நாடுகளுக்கு சென்றுள்ளார்கள்.

இலங்கை வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து முறையான வழிமுறைகளுடன் வெளிநாடு செல்லும் பணிப்  பெண்கள் தொடர்பில் பணியகம் முழுப்  பொறுப்பேற்கும்.

இரண்டு வருடகால ஒப்பந்த அடிப்படையில் இலங்கை பணிப்பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக செல்கின்ற போதும்  சட்டத்துக்கு அமைய வெளிநாடு செல்லுமாறு பல அறிவுறுத்தல்களை விடுத்தாலும் ஒரு தரப்பினர் மனித கடத்தல் வியாபாரிகளிடம் அகப்பட்டுக் கொள்கிறார்கள். 

மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவர் வெளிநாடுகளுக்கான மனித கடத்தல் குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல்,சட்டத்துக்கு முரணான வகையில் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள இலங்கை பெண்களை மனிதாபிமான அடிப்படையில் நாட்டுக்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய மட்டத்தில் தாதியர் சேவையில்  36 ஆயிரம் மில்லியன் தாதியர்களுக்கான கேள்வி காணப்படுகிறது. முறையான பயிற்சிகளுடன் இலங்கை தாதியர்களுக்கு உலகளாவிய மட்டத்தில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள இலங்கை மருத்துவம் மற்றும் தாதியர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது.