வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை ஏப்ரல் 10ஆம் திகதி.

 

 


 

வவுனியா, ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை ஏப்ரல் 10ஆம் திகதிக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தால் திகதி இடப்பட்டுள்ளது.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த நெடுங்கேணி பொலிஸார் ஆலய நிர்வாகத்தினரின் தொலைபேசி அழைப்புக்களை பெற கடந்த செவ்வாய் கிழமை (28) வவுனியா நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரினர்.

இதன்போது மன்றில் இருந்த சட்டத்தரணிகள் பொலிஸாரின் கோரிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்ததுடன், குறித்த விக்கிரகங்களை உடைத்தமை தொடர்பில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும், அதற்கு மன்று உத்தரவு இட வேண்டும் எனவும் கோரினர்.

சட்டத்தரணிகளின் கோரிக்கையை ஏற்ற வவுனியா நீதவான் நீதிமன்ற நீதிபதி சுபாசினி தேவராசா உடனடியாக விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு, இம்மாதம் 30 திகதி மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும், குற்றவாளிகளை கைது செய்யுமாறும் உத்தரவிட்டார்.

இதனடிப்படையில் நேற்று (30) மன்றில் முன்னிலையான பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும், தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், குறித்த வெடுக்குநாறிப் பகுதி தொலைபேசி அலைவரிசை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் பொலிஸார் மன்றின் அனுமதி கோரினர்.

இதனை அடுத்து வழக்கு விசாரணை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு வவுனியா நீதவான் நீதிமன்றால் திகதி இடப்பட்டது.