மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டிற்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் 2023.

 

 
மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டிற்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் (30) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.
குறிப்பாக இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.
கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கருத்து தெரிவிக்கையில் மாவட்டத்தின் கட்டுமான பணிக்காக மண்ணகழ்வு மேற்க்கொள்ளும் போது வெளிப்படைத்தன்மைரீதியாக செயற்படவேண்டும் என பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கியதுடன் மாவட்டத்தில் உள்ள எல்.ஆர்.சி காணிகளின் இருப்பு மற்றும் அதன் அமைவிடம் தொடர்பாக அறிக்கை செய்ய வேண்டும் என இதன் அதிகாரிகளை பணித்திருந்தார்.
மேலும் இம்மாவட்டத்தின் பொருளாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்ஜனி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள், மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகள், மற்றும் பிரதேச செயலாளர்கள், ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.