முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதல் முறையாக பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

 

 


இலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதலான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்  தொடர்பில் அப்போது ஜனாதிபதியாக பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதல் முறையாகபகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

கொழும்பில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு பகிரங்க மன்னிப்பு கோரினார்.

2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமையின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் பொலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, முன்னாள் தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகவும்   தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீட்டை வழங்குமாறும் இலங்கை உயர் நீதிமன்றம் கடந்த 12ம் திகதி உத்தரவொன்றை பிறப்பித்தது.

இதற்கமைய, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அத்துடன், முன்னாள் பொலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வு பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோர் 75 மில்லியன் ரூபா விதமும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 50 மில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.