மட்டக்களப்பு கிரான் குளம் கிராமத்தில் யானைகளின் அட்டகாசம்.

      














 மட்டக்களப்பு கிரான் குளம் ஓடை வடக்கு கண்டம் பகுதி குளத்தில் தஞ்சம் புகுந்து கிராமங்களைச் சூறையாடும்  காட்டு யானை கூட்டம்:  40 ஆண்டுகால விளை நிலங்கள் தென்னந்தோப்பு அழிப்பு!

ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிரான் குளம்  ஓடை வடக்கு கண்டம்  கிராமத்தில் நேற்று இரவு புகுந்த காட்டு யானைகள் மூன்று விவசாயின்  40 ஆண்டுகால உழைப்பை ஒரே இரவில் தரைமட்டமாக்கியுள்ளது.

பகல் வேளையில் குளம் - இரவு வேளையில் கிராமம்
குறித்த காட்டு யானைகள் மூன்று நாட்களாக இப்பகுதியில் அட்டகாசம் செய்து வருகின்றது. பகல் நேரங்களில் குளத்தின்  பகுதியில் நின்றுகொள்ளும் இந்த யானைகள் இரவு 10 மணியானதும் கிராமத்திற்குள் ஊடுருவுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

 இதனால் மக்கள் மாலை வேளைகளுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வரவும், தமது தோட்டங்களுக்குச் செல்லவும் பெரும் அச்சமடைந்துள்ளனர்.


நேற்று இரவு 10 மணியளவில் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் அங்குள்ள வேலிகளை சேதப்படுத்திபயதுடன் பயன்தரும் மரங்கள் உள்ளிட்ட விவசாய விளை நிலங்களில் புகுந்து சேதப்படுத்தியுள்ளது.

இதில்  பல வருடங்களாகக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வளர்க்கப்பட்ட, பலன் தரக்கூடிய தென்னை மரங்கள் அடியோடு சாய்த்துச் சிதைக்கப்பட்டுள்ளன.

யானைத் தாக்குதலால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் தமது கவலையை இவ்வாறு வெளிப்படுத்தினர்

"அரசாங்கம் காட்டு யானைகளைப் பாதுகாப்பதில் காட்டும் அக்கறையை, எம்மைப் போன்ற விவசாயிகளைப் பாதுகாப்பதில் காட்டுவதில்லை. யானைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அதற்காக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைக்க அனுமதிப்பது முறையற்றது.
 எங்களது முழு வாழ்வாதாரமே இந்தப் பயிர்ச்செய்கையை நம்பித் தான் இருந்தது, இன்று அனைத்தும் பறிபோய்விட்டது.

தொடர்ச்சியாக அச்சுறுத்தி வரும் இந்தக் காட்டு யானையை இப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய நஷ்டஈட்டை அரசு பெற்றுத் தர வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்