டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் மட்டக்களப்பு நாவற்குடா ATIT நிறுவனம் – சுற்றுப்புறச் சூழல் சிரமதானப் பணி முன்னெடுப்பு

 





















ஜனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைப்பில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், ATIT நிறுவனத்தின் ஏற்பாட்டில் விசேட சுற்றுப்புறச் சூழல் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவில் (TVEC) பதிவு செய்யப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிறுவனங்கள், தமது சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தத்தமது பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கமைய, 14.09.2026 முதல் 19.09.2026 வரை 62 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளில் முன்னெடுக்கப்படும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், ATIT நிறுவனத்தின் பணியாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து சுற்றுப்புறச் சூழலைத் தூய்மைப்படுத்தும் சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது, நிறுவனத்தைச் சூழவுள்ள பகுதிகளுடன், அருகிலுள்ள மட். தருமரெத்தினம் வித்தியாலயத்தின் சுற்றுப்புறச் சூழலும் சுத்தப்படுத்தப்பட்டதுடன், டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சமூக நலனையும் பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கை, டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதில் சமூகத்தின் ஒவ்வொரு தரப்பினரினதும் பங்களிப்பு அவசியம் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.

இந்நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்று ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய ATIT நிறுவனத்தின் பணியாளர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏனைய அனைவருக்கும் நிறுவனத்தின் பணிப்பாளர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.