. ஊழலை முழுமையாக ஒழிக்க வேண்டுமாயின் ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். - ஜனாதிபதி

 


எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை எனக்கு கிடையாது. அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சுயாதீனமான முறையில் தான் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கைதுகள் இடம்பெறுவதையிட்;டு ஊழல்வாதிகள் அணி கலக்கமடைய தேவையில்லை. இது ஆரம்பம் தான் இனி கைதுகள் தொடரும். ஊழலை முழுமையாக ஒழிக்க வேண்டுமாயின் ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் எதிர்கால தலைமுறையினர் ஊழலற்ற அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நொச்சியாகம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் திணறுகிறார்கள். கூட்டங்களை நடத்துகிறார்கள். ஊழல்வாதிகளை கைது செய்வதிலும் வரையறையுள்ளது என்று குறிப்பிடுகிறார்கள்.

 ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவதற்காகவே மக்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். அந்த ஆணைக்கு அமைவாகவே நான் செயற்படுகிறேன். ஊழல் குற்றத்துக்காக மகன் சிறைச் சென்றுள்ளார் என்று அழுது புலம்புவது பயனில்லை. அரச நிதியை கொள்ளையடிக்க கூடாது என்று பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்க வேண்டும்.

ஊழல்வாதிகளை கைது செய்யும் போது நான் அரசியல் பழிவாங்களில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை எனக்கு கிடையாது. 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேக்காவும் நானும் ஒரே ஹோட்டலில் இருந்தவாறு தேர்தல் முடிவுகளை பார்த்துக் கொண்டிருந்தோம். முடிவுகள் வெளியாகி முடிந்தவுடன் அந்த ஹோட்டலை இராணுவத்தினர் சுற்றிவளைத்தார்கள். சரத் பொன்சேக்காவும் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார்.

அப்போதைய அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டியதற்காக ஊடக நிறுவனம் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அரச அதிகாரிகள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டார்கள்.பலர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார்கள்.இதுதான் அரசியல பழிவாங்கல்.

எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை எனக்கு கிடையாது. அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சுயாதீனமான முறையில் தான் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கைதுகள் இடம்பெறுவதையிட்;டு ஊழல்வாதிகள் அணி கலக்கமடைய தேவையில்லை. இது ஆரம்பம் தான் இனி கைதுகள் தொடரும்.

வெளிநாடுகள் தலைமறைவாகியுள்ள ஊழல்வாதிகள் வெகுவிரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள். இராஜதந்திர மட்டத்தில் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊழலை முழுமையாக ஒழிக்க வேண்டுமாயின் ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் எதிர்கால தலைமுறையினர் ஊழலற்ற அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் என்றார்.