பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம்

 


நிலவும் மோசமான வானிலை நிலையை கருத்தில் கொண்டு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்விச் செயற்பாடுகளும் மற்றும் பரீட்சைகளும் மறுஅறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனினும், பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய சேவைகள் வழமையானபடி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் கையொப்பத்துடன் பின்வரும் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பாதுகாப்பாக தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லக்கூடிய மாணவர்கள் அவ்வாறு செல்லலாம்.

மோசமான வானிலை காரணமாக வீடுகளுக்குச் செல்ல முடியாத மாணவர்கள், சரசவி மெதுர விடுதியைத் தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழக விடுதிகளில், சம்பந்தப்பட்ட விடுதி நிர்வாகத்துக்கு அறிவித்த பின்னர் தங்கியிருக்கலாம்.

 

ஆபத்தான தனியார் தங்குமிடங்களில் தங்கியிருக்கும் மாணவர்கள் பாதுகாப்பு கருதி பல்கலைக்கழக விடுதிகளுக்கு வருவார்களானால், அவர்களை ஏற்றுக்கொண்டு தேவையான பதிவுகளை பராமரிக்குமாறு விடுதி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்த மாணவரும் விடுதிகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் பல்கலைக்கழகம் வலியுறுத்தியுள்ளது.

நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை, பல்கலைக்கழக சமூகத்தினர் அனைவரும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படும் திகதி பின்னர் ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.