டித்வா
புயலால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன் வளர்ப்பை
மேற்கொள்ளும் மீனவர்களுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு
நேற்று (24) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்
நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், பிரதேச
ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு கலந்துகொண்டு
பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
கரையோர நீர் வாழ் உயிரினங்கள் வளர்ப்பு அபிவிருத்தி திணைக்களத்தின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் எஸ்.ரவிக்குமார் அவர்களில் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 31 பயனாளிகளுக்கு சுமார் 14.25 மில்லியன் ரூபா பெறுமதியான நிதியுதவிக் காசோலைகளும், குளங்களில் மீன் குஞ்சு உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் 5 சங்கங்களுக்கு 1.75 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மீன்பிடி அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் எஸ். எம். ஏ. நசார்,
மாவட்ட நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர் ஜே. நெல்சன்
உள்ளிட்ட நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர்கள் பலரும்
கலந்துகொண்டனர்.
காசோலை வழங்கும் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதேச ஒருங்கிணைப்புக்
குழுத் தலைவர் கந்தசாமி பிரபு, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக்
கட்டியெழுப்பி, அவர்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்காக
அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத்
தெரிவித்தார்.
அத்துடன், தற்போதைய எல் நினோ பாதிப்பினால் குடிநீரைப் பெறுவதில் சிரமங்களை
எதிர்நோக்கும் மக்களுக்கு, குடிநீர் பவுசர்கள் மூலம் குடிநீர்
வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்
குறிப்பிட்டார்.
தற்போதைய எல் நினோ தாக்கத்தினால் மீன்பிடித் துறையில் வருமானம் குறைந்து
வருவதுடன், குளங்களின் நீர்மட்டமும் குறைந்து வருவதால் மீனவர்களும் பல்வேறு
பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





