சர்வதேச
சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு இலங்கையின்
உள்நாட்டு பொருளாதாரத்திலும் மக்களின் வாழ்க்கை செலவிலும் கடுமையான
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர்
மேலும் தெரிவிக்கையில், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சமையல்
எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கு 3168 மில்லியன்
அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.
இது
கடந்த ஆண்டின் (2025) இதே காலகட்டத்தில் 1995 மில்லியன் அமெரிக்க டொலராக
இருந்தது. இதன்படி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த
ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறிப்பிடத்தக்க
அளவில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிதி
மற்றும் விலை ஸ்திரத்தன்மையைப் பேணும் நோக்கில், இந்த ஆண்டு மே மாதத்தில்
இலங்கை மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வட்டி வீதம் 100 அடிப்படைப்
புள்ளிகளால் உயர்த்தப்பட்டு 8.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சப்புகஸ்கந்த
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்குத் தேவையான மசகு எண்ணெய் மற்றும்
விசேட எரிபொருள் வகைகளை இறக்குமதி செய்யத் தனித்தனி கேள்விப்பத்திர
நடைமுறைகள் பின்பற்றப்படுவதுடன், விலை மதிப்பீடுகளில் வெளிப்படைத்தன்மை
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை,
நாட்டின் ஏற்றுமதித் துறையில் உணவு, உரம் மற்றும் இரசாயனப் பொருட்கள்
உள்ளிட்ட பொருட்கள் சர்வதேச சந்தையில் கடுமையான விலைப் போட்டியையும்
அதிகரித்துள்ள போக்குவரத்துச் செலவுகளையும் எதிர்கொண்டு வருகிறது என
சுட்டிக்காட்டியுள்ளார்.