ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உணவு கையாளும் நிலையங்களில் திடீர் சுகாதாரப் பரிசோதனை – 7 நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை












    








 
     





 
 




 





















“பாதுகாப்பான உணவு – ஆரோக்கியமான சமூகம்” மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பானதும் சுகாதாரமானதுமான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் சுகாதாரப் பிரிவினரால் தொடர்ச்சியாக திடீர் சுகாதாரப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 19.08.2026 அன்று ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவகங்கள், வெதுப்பகங்கள், அங்காடிகள், தேநீர் சாலைகள் உள்ளிட்ட உணவு கையாளும் நிலையங்களில் திடீர் சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி DR.R. முரளீஸ்வரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாகவும், சுற்றுச்சூழல், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. M . அச்சுதன் அவர்களின் மேற்பார்வையில் இப்பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நடவடிக்கையில் பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி Dr.R. ரமேஷ், பிராந்தியத்திற்குப் பொறுப்பான மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் T. கிருஷாந்தன் பிராந்திய உணவு மற்றும் ஒளடதப் பரிசோதகர் விமலசேகரம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் இதில் ஈடுபட்டனர். பரிசோதனைகளின்போது உணவுப் பொருட்கள் பாதுகாப்பாகவும் சுகாதாரமான முறையிலும் கையாளப்படுகின்றனவா, உணவு தயாரிக்கும் மற்றும் பரிமாறும் இடங்களின் தூய்மை, உணவுப் பொருட்களின் சேமிப்பு முறைகள், ஊழியர்களின் தனிநபர் சுகாதாரம் மற்றும் உணவு கையாளும் ஊழியர்களுக்கான மருத்துவச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு சுகாதார விடயங்கள் பரிசோதிக்கப்பட்டன. இதன்போது உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியமை, உணவு கையாளும் ஊழியர்களிடம் உரிய மருத்துவச் சான்றிதழ்கள் இல்லாமை மற்றும் சுகாதாரமற்ற சூழலில் உணவுப் பொருட்கள் கையாளப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இதனையடுத்து, குறைபாடுகள் காணப்பட்ட 7 உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத நிலையங்கள் தொடர்பில் எதிர்காலத்திலும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 🛑 பொதுமக்களும் விழிப்புடன் செயற்பட வேண்டும்! உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சுகாதாரத் துறையினரின் பொறுப்பு மட்டுமல்ல. உணவை கொள்வனவு செய்து உட்கொள்ளும் ஒவ்வொரு பொதுமகனுக்கும் இதில் முக்கியமான பங்கு உள்ளது. உணவகங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்களைத் தெரிவுசெய்யும்போது,
  • சுற்றுச்சூழல் தூய்மையாக உள்ளதா?
  • உணவு சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா?
  • உணவுப் பொருட்கள் மூடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனவா?
  • உணவு தயாரிக்கும் இடங்கள் சுத்தமாக உள்ளனவா?
  • ஊழியர்களின் தனிநபர் சுகாதாரம் பேணப்படுகிறதா?
  • உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா?
என்பவற்றை பொதுமக்கள் அவதானிக்க வேண்டும். சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவது, கையாளப்படுவது அல்லது சேமிக்கப்படுவது உணவு மூலம் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கக்கூடும். எனவே, உணவு விற்பனை நிலைய உரிமையாளர்கள் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து பொதுமக்களின் சுகாதாரத்தை முதன்மைப்படுத்த வேண்டும். 📢 உணவு தொடர்பான முறைப்பாடுகளை எவ்வாறு தெரிவிப்பது? உணவு கையாளும் அல்லது விற்பனை செய்யும் நிலையங்களில் சுகாதாரமற்ற நடைமுறைகள் காணப்பட்டால், பொதுமக்கள் அவற்றை உரிய சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரலாம். 📱 WhatsApp: 070 571 1151 இந்த இலக்கத்திற்கு குரல் பதிவு, புகைப்படங்கள் அல்லது காணொளிப் பதிவுகள் மூலம் உணவு தொடர்பான முறைப்பாடுகளை அனுப்பலாம். 📍 பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, மட்டக்களப்பு உங்கள் ஒரு தகவல், பலரின் சுகாதாரத்தைப் பாதுகாக்க உதவலாம். 🥗 “பாதுகாப்பான உணவு – ஆரோக்கியமான சமூகம்” உணவு விற்பனையாளர்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவோம். பொதுமக்கள் உணவின் பாதுகாப்பை அவதானிப்போம். சந்தேகத்திற்கிடமான உணவு தொடர்பான விடயங்களை உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்போம். உணவுப் பாதுகாப்பு என்பது அனைவரின் பொறுப்பும்!