எரிபொருள் விநியோகத்தை பாதுகாப்பதற்காக கோட்டா முறைமை தொடர்ந்து அமுல்படுத்தப்படும் .

 


நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் கோட்டா முறையை (க்யூ.ஆர்) நீக்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எரிபொருள் விநியோகத்தை பாதுகாப்பதற்காக கோட்டா முறைமை தொடர்ந்து அமுல்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திக்குமார தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலையின் ஸ்திரமற்ற தன்மை மற்றும் உலகளாவிய அரசியல் பதற்றநிலை தற்போதைய பிரச்சினையாக காணப்படுகிறது.

கோட்டா முறையின் மூலம் நாட்டின் எரிபொருள் நுகர்வு கட்டுப்படுத்தப்படுவதால், எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படும் நாட்டின் வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு கையிருப்பை முறையாக நிர்வகிக்க முடிகிறது.

 உலகளாவிய போர்ச் சூழல்கள் மேலும் தீவிரமடைந்தால், நாட்டில் மீண்டும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுப்பதுடன், மக்கள் வரிசைகளில் நின்று சிரமப்படுவதையும் தவிர்க்க முடிகிறது. தற்போதைய போர்ச் சூழல் நிலவியபோதிலும், இதுவரை இலங்கையின் எரிபொருள் விநியோகக் கட்டமைப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், உலக சந்தையில் விலைகள் மீண்டும் உயரக்கூடும் என்பதால்,அது குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

உலகளாவிய அபாயகரமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், உள்நாட்டு நுகர்வோருக்கு தடையின்றி எரிபொருளை வழங்குவதை உறுதி செய்வதற்காக கூட்டுத்தாபனம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.ஆகவே தற்போதைய நிலையில் கோட்டா முறைமையை இரத்துச் செய்வது பற்றி தீர்மானிக்கவில்லை என்றார்.