ஐஸ் போதைப்பொருளுடன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக, இன்று (12) காலை ஐஸ் போதைப்பொருளுடன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 3.2 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சிவில் பாதுகாப்பு குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இன்று காலை திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். 


இதன்போது, சந்தேக நபரை பரிசோதித்ததில் அவரிடமிருந்து இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.


பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது, இவர் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கிண்ணியா குறிஞ்சாக்கேணி அரபா ஆண்கள் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவராவார். 


இவர் கிண்ணியா காக்காமுனைப் பகுதியை பிறப்பிடமாகவும், முனைச்சேனை பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான ஏற்பாடுகளை கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.