போலி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது .

 


பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, வீடுகள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து ஏமாற்றிப் பணம் பறிக்கும் குழுவொன்று இயங்கி வருவதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்புப் பரிசோதனை நடவடிக்கைகளை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் இந்த மோசடிக்காரர்கள், சட்டபூர்வ நடவடிக்கைகள் எனக் கூறி பொதுமக்களிடம் பணம் கோரி வருவதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தங்களது உத்தியோகபூர்வ கடமைகளின் போது எந்தக் காரணம் கொண்டும் எந்தவொரு கட்டணத்தையும் வசூலிப்பதோ அல்லது பணத்தைப் பெற்றுக்கொள்வதோ இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எனக்கூறி எவரேனும் பணம் கோரினால், அவர்களுக்குப் பணம் வழங்குவதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.