chief editor.
நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குத் தீர்வை வழங்கும் நோக்கில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை உள்வாங்குவதற்காக நடத்தப்பட்ட "போட்டிப் பரீட்சை 2023 (2026)", நாடு முழுவதிலும் உள்ள 1,048 பரீட்சை மத்திய நிலையங்களில் எவ்வித இடையூறுகளுமின்றி மிகவும் சுமுகமான முறையில் இடம்பெற்றது.
இம்முறை பரீட்சையின் விசேட அம்சம் என்னவெனில், பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் தட்டுப்பாட்டுக்கு விரைவான தீர்வை வழங்கும் நோக்கில், அரச சேவையில் ஏற்கனவே இணைந்துள்ள பட்டதாரிகளுக்கும் ஏனைய துறைசார் பட்டதாரிகளுக்கும் ஒரே சந்தர்ப்பத்தில் தோற்றக்கூடிய வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையாகும்.
இப் போட்டிப் பரீட்சைக்காக நாடு முழுவதிலும் இருந்து பெருமளவிலான பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். அதன் விபரம் வருமாறு:
அரச சேவையில் உள்ள பட்டதாரிகள்: 66,991 பேர்
ஏனைய துறைசார் பட்டதாரிகள்: 96,442 பேர்
விசேட தேவையுடைய விண்ணப்பதாரர்கள்: 323 பேர்
விசேட தேவையுடைய விண்ணப்பதாரர்களுக்காக பரீட்சை மத்திய நிலையங்களில் தகுந்த விசேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
இப் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்பட்டு, நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கைக்கு அமைய தகுதியான பட்டதாரிகள் இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படவுள்ளதாக பரீட்சைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





