அரசின் “கிளீன் ஸ்ரீ லங்கா – ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு” நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், கோறளைப்பற்று தெற்கு – கிரான் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை மற்றும் விஷேட பொதுமக்கள் சேவைத் திட்டங்களை செயற்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி.பி.நிருபா அவர்களின் ஏற்பாட்டில் இன்று (11) திகதி கிரான் புலிபாய்ந்தகல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம் பெற்ற பொதுமக்களுக்கான சுகாதார சேவையினை வழங்கும் நடமாடும் சேவையினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்துவைத்தார்.
கோறளைப்பற்று தெற்கு – கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த பொது மக்கள் குறித்த ஆயுள்வேத மருத்துவ முகாமிற்கு அதிகளவில் வருகைதந்ததுடன், தமக்கான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்து வகைகளைப் பெற்றுக்கொண்டதுடன், நீராவி மூளிகை மருத்துவத்துவம், ஆயுள்வேத மசாஜ் போன்ற மருத்துவ தேவைகளும் இதன் போது பொது மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
மேற்படி நடமாடும் சேவைக்கான கணனி முறைமையானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் திருமதி.கே.லக்ஷிகா மற்றும் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் திருமதி.ஜே.நிமாஜினி ஆகியோரினால் வடிவமைக்கப்பட்டு கணனி முறைமையினூடாக தரவுகள் உள்ளடக்கப்பட்டதுடன், குறித்த நடமாடும் சேவையில் மாவட்ட செயலக உயரதிகாரிகள், கிரான் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.வி.லோகினி, நிருவாக உத்தியோகத்தர் எஸ்.திவாகரன் உள்ளிட்ட பிரதேச செயலக உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், ஆயுள்வேத திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் குறித்த நடமாடும் சேவையானது நாளை (12) திகதி கிரான் ரெஜி மண்டபத்தில் தொழில் வழிகாட்டல் தொடர்பாக இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் (13) திகதி முருக்கன் தீவில் சுற்றாடல் சார் நடமாடும் சேவையும், (15) திகதி ஊத்துச்சேனையில் சுகாதார துறை சார்ந்த நடமாடும் சேவையும், (16) திகதி கிரான் ரெஜி மண்டபத்தில் அனைத்து திணைக்களங்கள் சார் நடமாடும் சேவையும், அதனைத் தொடர்ந்து மறுநாள் (17) திகதி ரெஜி மண்டபத்தில் கலாசார நிகழ்வுகள் மற்றும் பாரம்பரிய பொருட்களின் கண்காட்சி என்பனவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் இடம் பெற்ற நடமாடும் சேவையில் கலந்து கொண்டு பயனடைந்த பொதுமக்கள் இந்த நடமாடும் சேவையினை ஏற்பாடு செய்தமைக்காக கிரான் பிரதேச செயலகத்திற்கும், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கும் குறிப்பாக அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





