நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ் மொழிப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் .

 


நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தொடர்பாடல் திறன்களை வலுப்படுத்துவதற்கும், சமூகங்களுக்கிடையில் சிறந்த புரிதலை மேம்படுத்துவதற்கும் வசதியாக, அவர்களுக்குரிய சிங்களம் மற்றும் தமிழ் மொழிப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதிகாரபூர்வ மொழிகள் திணைக்களத்தின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் சேவை அலுவலகத்தால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

 

ஆரம்ப விழாவில் உரையாற்றிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, "ஒரு குறிப்பிட்ட மொழியில் மக்கள் சரியாகத் தொடர்பு கொள்ள முடியாமல் போகும் போது பல மோதல்கள் எழுகின்றன" என்று குறிப்பிட்டு, இன மற்றும் மத பதற்றங்களைத் தணிப்பதில் மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.


நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உரையாற்றும் போது, ​​மொழி என்பது மரியாதையின் வடிவம் என்றும், ஒரு குடிமகன் பேசும் மொழியின் அடிப்படையில் அவரை வித்தியாசமாக நடத்தக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

மேலும், நாடாளுமன்றத்தின் இந்த மும்மொழிக் கொள்கைக்கான அர்ப்பணிப்பு தேசிய மொழிக் கொள்கையை ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த மொழிப் பயிற்சித் திட்டத்தில் சிங்கள மொழிப் பயிற்சிக்கு 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் மொழிப் பயிற்சிக்கு 63 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதிவு செய்துள்ளனர்.