இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் சில தினங்களுக்கு நிலவுகின்ற மழையுடனான வானிலை தொடரக்கூடும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரராந்தியங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
வட மாகாணத்திலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
#கடல் பிராந்தியங்களில்
தென் அந்தமான் கடல் பிராந்தியத்திற்கு மேலாக நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் படிப்படியாக விருத்தியடைவதுடன் மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து செல்கின்றது. ஆனபடியினால் அந்தமான் கடல் பிராந்தியத்திற்கு மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை, காங்கேசன்துறை, மன்னார், புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.





