அம்பாறை
மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச தாண்டியடி உமிரி பிரதேசம் அண்மைக்காலமாக
காட்டு யானைகளின் பாரிய அட்டகாசத்திற்கு இலக்காகி வருகிறது.
அவை அங்குள்ள பெறுமதி வாய்ந்த நூற்றுக்கணக்கான தென்னைகளின் குருத்தை உண்டு அழித்து வருகிறது.
இதனால் பல நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் மற்றும் தென்னம் பிள்ளைகள் குருத்தின்றி அடியோடு சாய்ந்து கிடக்கின்றன.
தேங்காய்களுக்கு
நிலவும் தட்டுப்பாடு மற்றும் மௌசுக்கு மத்தியில் இவ்வாறு வீணாக அவைகள்
அளிக்கப் பட்டு வருவதையிட்டு தோட்டக்காரர்கள் கவலையும் விரக்தியும்
அடைந்துள்ளனர்.
அங்குள்ள தோட்டங்கள் காணிகளுக்கு தினமும் பகல் இரவு வேளைகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக தொடர்ச்சியாக வருகிறது .
வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் வந்து விரட்டினாலும் மீண்டும் வந்து பாடுபட்டு நட்டு வளர்த்த பயிர்களை அழித்து வருகிறது.
யானைகளை
விரட்ட முற்பட்ட பொதுமக்களை அவை தாக்கியும் வருகிறது. இந்த வருடத்தில்
மட்டும் அப்பகுதியில் மூவர் யானையால் கொல்லப்பட்டுள்ளனர்.
தென்னைகளின் பாதுகாப்பு அதை வெட்டுவதற்கு இட்ட புதிய சட்டம் எல்லாம் புதிய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவது தெரிந்ததே.
எனினும் இப் பகுதியில் அவை அமுலில் இல்லையா? என்ற கேள்வியும் எழுகிறது.
எனவே
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக கவனத்தில் கொண்டு தென்னை களையும் பயிர்
பச்சைகளையும் மக்களையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள்
கேட்டுக் கொண்டுள்ளனர்.
( வி.ரி.சகாதேவராஜா)