மாவீரர் தினத்தை முன்னிட்டு தரவை மாவீரர் தியிலுமில்லம் துப்பரவு செய்யும் பணிகள் தரவை மாவீரர் துயிலுமில்ல நிருவாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.

 

 











எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தரவை மாவீரர் தியிலுமில்லம் துப்பரவு செய்யும் பணிகள் தரவை மாவீரர் துயிலுமில்ல நிருவாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.

தரவை மாவீரர் துயிலுமில்ல நிருவாகத்தின் உபதலைவர் பூ.மயில்வாகனம் தலைமையில் இடம்பெற்ற இத்துப்பரவுப் பணியில் குறித்த துயிலுமில்ல நிருவாகத்தின் கணக்காய்வாளர் அரவிந்தன் மற்றும் குறித்த நிருவாகத்தின் பிரதிநிதிகள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

துப்பரவுப் பணி ஆரம்பத்தில் மாவீரர் ஒருவரின் தாயாரினால் நினைவுச் சுடரேற்றப்பட்டு, வருகை தந்தவர்களால் மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து துப்பரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் போது கருத்துத் தெரிவித்த மாவீரர் துயிலுமில்ல நிருவாகத்தினர்,

குறித்த துயிலுமில்லங்களை யாரும் நிதி திரட்டும் செயற்பாடுகளாக மாற்ற வேண்டாம். இது மாவீரர் தாய்மார், அவர்களின் குடும்பங்களுக்கான விடயங்கள் இதனை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். எனவே மற்றவர்கள் இதனை வைத்து தங்கள் நிதி திரட்டல்களை மேற்கொள்ளாதீர்கள். இவர்களுக்கு நிதிவழங்குபவர்களும் இதனை நிறுத்த வேண்டும்.

இது இதயபூர்வமாகச் செய்கின்ற விடயம். இதனை காசாக மாற்ற வேண்டாம்.

அத்துடன் இங்கு யாரும் வரலாம் இது யாரும் தனித்து உரிமை கொண்டாடும் விடயமல்ல. அனைவரும்  வரலாம் ஆனால் இதனை அரசியலாக்க வேண்டாம்.

இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு எமது மாவீரச் செல்வங்களுக்காக தங்கள அஞ்சலியினை செலுத்த இதயபூர்வமாக வருமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்தனர்.