மட்டக்களப்பு - பொலன்னறுவை வீதியில் ஓட்டமாவடி வாகனேரி பிரதேசத்தில் நேற்று (23) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
வேனும் டிப்பரும் நேருக்கு நேர் மோதியதில் வேனின் சாரதி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பெண்கள் உள்ளிட்ட எழு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெலிகந்த, சேனபுர பிரதேசத்தைச்சேர்ந்த 74 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த அவரது மனைவி மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வேன் சாய்ந்தமருதில் இருந்து வெலிகந்தை சேனபுர நோக்கி சென்று கொண்டிருந்த போது அதே திசையில் முன்னால் சென்ற பவுசர் வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்டபோது எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியும் காயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வரதன்



.jpeg)




