முன்னாள் இராஜாங்க அமைச்சர்
சிவநேசதுரை சந்திரகாந்தன், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முழுமையாக
அறிந்திருந்தமை தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையான்
எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் விளக்கமறியலில் தடுத்து
வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், ஏப்ரல் 21 தாக்குதலை நடத்த
திட்டமிடப்பட்டிருந்தமையை அவர் முழுமையாக அறிந்திருந்ததாக பொதுமக்கள்
பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெற்று வருகிறது.
இதன்போது உரையாற்றிய அமைச்சர் இந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்திருந்தார்.
இதேவேளை, 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு,
வவுணதீவு பகுதியில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறை
உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டமைக்கும் ஏப்ரல் 21 தாக்குதலுக்கும்
தொடர்புள்ளதென அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.
மேலும் ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம்
தொடர்பில் செனல் 4 ஊடகத்திற்கு பல தகவல்களை வழங்கிய பிள்ளையானின் நெருங்கிய
சகாவான அசாத் மௌலானாவை நாட்டிற்கு அழைத்துவந்து விசாரணைகளை முன்னெடுக்க
அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.