கதிர்காமம் கண்டுகொள்ளாத பிரதான கொடியேற்றம்! தெய்வானை அம்மன், சிவனாலயத்தில் நடந்தது!













வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய பிரதான இந்து முறைப்படியான கொடியேற்றம் தெய்வானை அம்மன் ஆலயம் மற்றும் சிவன் ஆலயத்தில் கடந்த மூன்றாம் தேதி காலை சிறப்பாக இடம் பெற்றது .

எனினும் கதிர்காமம் கண்டுகொள்ளாத பிரதான நிர்வாகிகள் பங்கேற்காத கொடியேற்றமாக இது இன்று மாறிவிட்டது.

இதற்கென காட்டிலிருந்து தேக்கு மரக்கம்பு வெட்டப்பட்டு தெய்வானையம்மன் ஆலயத்தில் பூஜிக்கப்பட்டு வைக்கப்பட்டது .

அங்கிருந்து மூன்றாம் தேதி காலை முருகன் ஆலயம் உள்ளிட்ட ஏனைய ஆலயங்களை வலம் வந்து தெய்வானை அம்மன் ஆலய கொடித்தம்ப பீடத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டது .

அந்த தேக்குமர தடிக்கு பட்டு மற்றும் மாலைகள் சூட்டப்பட்டு நுனியில் சேவலையொத்த சிவப்பு வர்ணகொடி கட்டப்பட்டு சரியாக 845 மணியளவில் சிவாச்சாரியார்களால் கொடிக்கம்பம் நடப்பட்டது.
அச்சமயம் யாழ்ப்பாணம் சன்னதி அடியார்களே சூழ இருந்தார்கள்.

அதன் பின்பு அனைவரும் சென்று சிவனாலயத்தில் மற்றைய கொடி  நிறுவப்பட்டது .

ஆதிகாலம் தொடக்கம் இந்த கொடியேற்ற நிகழ்வு தான் கதிர்காமத்தில் பிரதானமாக நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

 ( வி.ரி. சகாதேவராஜா)