முத்தமிழ் வித்தகருக்கு யாழ்ப்பாணத்தில் துறவற நூற்றாண்டு விழா! ஊர்வலம்; சிலை திறப்பு; ஆய்வரங்கு; கலையரங்கு! பிரதம அதிதியாக சபாநாயகர்; அமைச்சர்கள் ஆளுநர் பங்கேற்பர்

 
















 உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின்  துறவற நூற்றாண்டு விழா யாழ்ப்பாணத்தில்   எதிர்வரும்  19 ஆம்,  20 ஆம் திகதிகளில் கோலாகலமாக நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது .

புத்தசாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம், யாழ்ப்பாண பிரதேச செயலகம், அகில இலங்கை இந்து மாமன்றம் மற்றும் யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் ஆகியன இணைந்து வரலாற்றில் முதல்முறையாக மாபெரும் துறவற நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட இருக்கிறது .


இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ய.அனிருத்தனனின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜெகத் விக்ரமரத்ன கலந்து சிறப்பிக்க இருக்கிறார் .

மேலும், புத்தசாசன மற்றும் சமய விவரங்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் பிரதி அமைச்சர் ஹமகெதற திசாநாயக்க ஆகியோரும் கலந்து கொள்கின்றார்கள் .

அத்துடன் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்க இருக்கிறார்கள் .

19 ஆம் தேதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்திலிருந்து சுவாமிகளின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்வலம் காலை  ஒன்பது மணிக்கு இடம் பெற இருக்கின்றது .
அதனைத் தொடர்ந்து மானிப்பாய் ஆலயடிச் சந்தியில் சுவாமிகளின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவிருக்கிறது.

அத்துடன் சுவாமிகள் அன்று அதிபராக இருந்த மானிப்பாய் இந்து கல்லூரியில் ஆரம்ப நிகழ்வுகள் காலையில் நடைபெற இருக்கின்றது.

19ஆம் தேதி மாலை 4 மணியளவில் நல்லூர் ஸ்ரீ துர்காதேவி மணிமண்டபத்தில் இசை அரங்கு இடம் பெற இருக்கின்றது .

மறுநாள் 20ஆம் தேதி காலையில் ஆய்வரங்கும்  மாலையில்  கலையரங்கும்
நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களிலும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் ஓவியக் கண்காட்சி நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதின கலா மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது.

அதேவேளைஅங்கு இரு தினங்களிலும் இந்து சமய கலாச்சார திணைக்களத்தின் புத்தக விற்பனையும் இடம்பெறஇருக்கிறது.
 
 ( வித்தகர் வி.ரி.சகாதேவராஜா)