இந்தியாவில் நீண்ட காலமாக தங்கியுள்ள இலங்கை அகதிகளை சட்டரீதியாக அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை?

 


 

 

இந்தியாவில் நீண்ட காலமாக தங்கியுள்ள இலங்கை அகதிகளை சட்டரீதியாக அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

அண்மையில் இந்தியாவிலிருந்து கடல் வழியாக யாழ்ப்பாணம் வருகை தந்த அகதி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 

எமது கட்சி கடந்த காலங்களில் இலங்கையில் இருந்து சென்ற தமிழ் அகதிகளுக்கு பிரஜா உரிமை வழங்க வேண்டும் என பாராளுமன்றத்தில் வலியுறுத்திப் பேசினோம்.

இந்தியாவில் தங்கி உள்ள அகதிகள் இலங்கை வருவதற்கு சட்டரீதியான ஆவணம் ஒரு பிரச்சனையாக உள்ள நிலையில் சிலர் கடல் வழியாக சட்ட விரோதமான முறையில் படகுகள் மூலம் நாட்டுக்கு மீள வருகிறார்கள். 

அரசாங்கம் என்ற வகையில் எமது நாட்டிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்றவர்களை சட்டரீதியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வெளிவிவகார அமைச்சினூடாக எடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

ஆகவே இந்தியாவிலிருந்து படகுமூலம் சட்டவிரோதமான முறையில் இலங்கை திரும்ப வேண்டாம் என கேட்டுக் கொள்வதோடு விரைவில் அவர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.