முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்கப்பட்ட தொன் கணக்கான தங்கத்தை பாதிக்கப்பட்ட மக்களுங்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

 


முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் முடிந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தமிழீழ வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்ட பொது மக்களின் நகைகளும் ஏனைய மக்களின் பொதுவான தங்கங்களும் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டன. அத்துடன் அன்றைய ராஜபக்ச அரசாங்கமும் இவற்றில் பங்கெடுத்தனர் என வடக்கு மாகாணசபையின்  முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடமைகளை இழந்து அணிந்திருந்த ஆடையுடன் இராணுவத்திடம்  சரணடைந்த நிலையில் தடுப்பு முகாம்களில்  ஆறு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு மீள் குடியேறினர் அவர்களில் 60% மக்கள் வறுமையில் தான் தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்கப்பட்ட தங்கத்தில் 6 மெற்றிக் தொன் ராஜபக்ச குடும்பத்தால் யப்பான் நாட்டிற்கு  விற்பனை செய்யப்பட்டதாக சரத் பொன்சேகா உட்பட பலர் தெரிவித்த நிலையில் இதற்கான உடனடி விசாரணையை  அரசாங்கம் நடாத்தி பாதிக்கப்பட்ட மக்களுங்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

ஊழலுக்கு முடிவு கட்டுவோம் என்ற நிகழ்ச்சி நிரலில் தங்க விற்பனையில் நடந்த மோசடியை பக்கச் சார்பு இன்றி ஆராய்ந்து நீதியை வழங்க வேண்டும்  தெரிவித்தார்.