இலங்கை கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் 23 வயதிற்குட்பட்ட வீரர்களை உள்ளடக்கிய Vaaj junior premier league தேசிய மட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் அம்பாறை மாவட்ட அணி முதலிடத்தைப் பெற்று சாம்பியனாக வெற்றி வாகை சூடியுள்ளது.
அம்பாறை மாவட்ட கூடைப்பந்தாட்ட அணியாக காரைதீவு கூடைப்பந்தாட்ட கழக அணியினர் பிரதிநிதித்துவப் படுத்தினர்.
இலங்கையின் 15 மாவட்டங்களின் பங்குபற்றுதலுடன் மாத்தறையில் கடந்த 9,10,11,12 திகதிகளில் இச் சுற்றுப் போட்டி இடம்பெற்றது.
இச் சுற்றுப்போட்டி தொடரில் அம்பாறை மாவட்டத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் காரைதீவு அணியானது குழு A யில் இடம்பிடித்து முதலாவது போட்டியில் வவுனியா மாவட்ட அணியினருடன் மோதி 19:74 எனும் புள்ளி அடிப்படையில் வெற்றியீட்டி 2 வது போட்டியில் மாத்தளை மாவட்ட அணியுடன் மோதி 71:25 எனும் புள்ளியினை பெற்று மாத்தளை மாவட்ட அணியினை 46 புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி அம்பாறை மாவட்ட அணி கால் அரையிறுதி போட்டிக்கு தெரிவானது.
கால் அரையிறுதி போட்டியில் நுவரெலியா மாவட்டத்தினை அம்பாறை மாவட்ட அணி எதிர்கொண்டு 59:40 எனும் புள்ளி அடிப்படையிலும் அரையிறுதி போட்டியில் மாத்தற மாவட்டத்தினை அம்பாறை மாவட்ட அணி எதிர்கொண்டு 58:46 எனும் புள்ளி அடிப்படையில் வெற்றியீட்டி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இச் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியானது நேற்று வியாழக்கிழமை 12.06.2025 மாலை 4.00 மணிக்கு மாத்தறை Lebeema உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
இறுதிப்போட்டியில் அம்பாறை மாவட்ட அணியானது பதுளை மாவட்ட அணியை 53:50 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிகொண்டு சம்பியனானது.
வரலாற்றில் முதல் தடவையாக காரைதீவு கூடைப்பந்தாட்ட அணி தேசிய ரீதியில் சாம்பியனாக வெற்றி வாகை சூடியுள்ளமையையிட்டு பல தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
(வி.ரி. சகாதேவராஜா)