எழுநா' சமூக விழிப்புணர்வு ஆவணப்படுத்தல் குழுமம் ஏற்பாடு செய்த இலங்கையில் நடந்தேறிய யுத்த காலங்களில் தமிழர்கள் எதிர் நோக்கிய இன்னல்கள் தொடர்பிலும், விசேடமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலை தொடர்பிலும் அவர்களது உறவுகளுடைய மனவெளிப்பாடுகள் மற்றும் அவை தொடர்பான சமூக ஆர்வலர்களின் கருத்துக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்களின் கருத்துக்கள் அடங்கிய ஆவண படம் வடக்கு கிழக்கு எங்குமே பொதுமக்கள் மத்தியில் திரையிடப்பட்டு பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்டறியும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இவ் ஆவணப்படம் வெளியீடு செய்யும் நிகழ்வு அம்பாறை மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று AWF அமைப்பின் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் அம்பாறை மாவட்டத் தலைவி த.செல்வராணி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சிவில் சமூக செயற்பாட்டாளர் தா.பிரதீபன் உட்பட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்து நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு இந்த ஆவண படத்தை பார்வையிட்டதோடு தமது கருத்துக்களையும் பகிர்ந்திருந்தனர்.
மிகவும் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் பல்வேறு தரப்பினரின் சாட்சியங்கள், அவர்கள் அனுபவித்து வரும் வலிகள், வேதனைகள் தொடர்பிலான உண்மைத் தன்மையான உணர்வுபூர்வமான பல விடயங்கள் ஆவணப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








