ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில்
சட்டவிரோதமாக 68 கைதிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில்
தெரியவந்துள்ளதாக மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் நேற்று கொழும்பு
நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, 2024 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ்
தினத்தில் 57 கைதிகளும், இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது மேலும் 11
கைதிகளும் தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் முறைகேடாக
விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை
ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள
ரத்நாயக்க முன்னிலையில் நேற்று பிரசன்னப்படுத்தப்பட்டபோது, மேலதிக
மன்றாடியார் நாயகம் இந்த சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
சில கைதிகள் ஜனாதிபதி மன்னிப்பு
பெற்றதைக் குறிக்கும் போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக துஷார உபுல்தெனிய மீது
குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விசாக பூரணை தினத்தின்போது, நாடு
முழுவதும் 29 சிறைகளிலிருந்து 338 கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும்,
அவர்களில் குறைந்தது இரண்டு பேர் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாகவும்
திலீப பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலை மற்றும் சட்ட அமுலாக்க
அமைப்புகளுக்குள் ஆழமான தோல்வியை இந்த வெளிப்படுத்தல்கள் பிரதிபலிக்கின்றன
என்றும், சட்டவிரோத நடைமுறைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் வேரூன்றத்
தொடங்கியுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டத்தின் ஆட்சியைக் குறைத்து
மதிப்பிடும் இவ்வாறான வலையமைப்புகளை அகற்ற சட்டமா அதிபர்
திணைக்களத்திற்கும் விசாரணை அதிகாரிகளுக்கும் ஆதரவு வழங்குமாறு அவர்
நீதித்துறையை வலியுறுத்தினார்.
அமைப்பிற்குள் சாத்தியமான ஊழல்களைக் கண்டறிய வேண்டியதற்கான அதிகரித்து வரும் தேவையை மேற்கோள்காட்டிய அவர்,
நாடு முழுவதும் உள்ள அனைத்து சிரேஷ்ட
சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளின் சொத்துக்கள் குறித்து
பிரத்தியேகமாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்
என்றும் குறிப்பிட்டுள்ளார்.