இலங்கை கண்டியிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தமிழ்நாட்டில் அகதியாக தஞ்சமடைந்துள்ளனர் .

 


இலங்கையின், மத்திய மலைநாட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
 
கண்டியைச் சேர்ந்த 43 வயதுடைய எம்.மொஹமட் கியாஸ், அவரது மனைவியான 34 வயதுடைய எம். பாத்திமா ஃபர்ஹானா ஆகியோரும், 12 மற்றும் 4 வயதுடைய அவர்களது மூன்று பிள்ளைகளுமே தமிழ் நாட்டில் பொருளாதார தஞ்சம் கோரியுள்ளனர். 
 
படகு மூலமாக இலங்கையிலிருந்து பயணித்த இவர்கள், இன்று அதிகாலை இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடிக்கு இடையேயான கரையில் இறக்கிவிடப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவிக்கிறது. 
 
மோசமான பொருளாதார நிலைமை காரணமாக தாங்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக, குறித்த குடும்பத்தினர் காவல்துறையிடம் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. 
 
இதனையடுத்து, அவர்களை மண்டபம் மறுவாழ்வு மையத்தில் தங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.