மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செம்மணியில் மேலும் 45 நாட்கள் அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 


மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செம்மணி - சிந்துபாத்தியில் மேலும் 45 நாட்கள் அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
அத்துடன் அது தொடர்பான செலவின திட்டத்தை நீதியமைச்சிற்கு அனுப்பி வைப்பதற்கும் இதன்போது உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
செம்மணி சிந்துபாத்தி பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதவான் ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 
 
இதன்போது வாதி தரப்பில் சமர்ப்பணங்களை முன்வைத்த சட்டத்தரணி, ஆரம்பக் கட்ட அகழ்வின் போது 6க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதாகவும் அங்கு மேலும் மனித எச்சங்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவித்தார். 
 
எனவே, செம்மணி - சிந்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்துமாறு மன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
 
இதேவேளை, இந்த வழக்கில் கடமையாற்றும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மற்றும் தொல்பொருள் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா ஆகியோரின் அறிக்கைகள் இன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் சில விடயங்களும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 
 
அதன்படி, அகழ்வு இடம்பெறும் இடத்தில் 1.6 மீற்றர் ஆழத்திலேயே மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
குழப்பமான சூழலில் குறித்த உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. 
 
ஆடைகளோ அல்லது தனிப்பட்ட அணிகலன்களோ குறித்த இடங்களில் காணப்படவில்லை. 
 
இது சட்டவிரோதமான இரகசியமான புதைகுழியாக இருக்கலாம் எனவும் அவர்கள் தங்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். 
 
இந்தநிலையில் தொடர்ச்சியாக அங்கு அகழ்வு பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்ற பரிந்துரையும் மன்றில் முன்வைக்கப்பட்டுள்ளன.