கிழக்கு மாகாணத்தில் 30 சபைகளுக்கான தவிசாளர் தெரிவுக்கூட்டங்கள் ஜுன் 11 முதல் ஜுலை 02 வரை! கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அஸ்மி அறிவித்தல்

 








நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் அறுதிப் பெரும்பான்மை இல்லாத 30 சபைகளுக்கான தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தெரிவுக்கூட்டங்கள்  ஜுன் 11 முதல் ஜுலை 02 வரை நடைபெறவுள்ளது..

இவ்வாறு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏஎல்எம்.அஸ்மி அறிவித்துள்ளார் .

இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ளதுடன் பத்திரிகை விளம்பரமும் விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபை முதல் அட்டாளைச்சேனை பிரதேச சபை ஈறான 30 சபைகளுக்கு தவிசாளர் உப தவிசாளர் தெரிவு இடம் பெறும்.

கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் தெரிவுக் கூட்டங்கள் தொடர்பாக கேட்ட பொழுது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

கிழக்கு மாகாணத்தில் 45 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. அவற்றில் கல்முனை மாநகர சபை தவிர்ந்த 44 சபைகளுக்கு அண்மையில் தேர்தல் இடம்பெற்றது.

தெரிவான உறுப்பினர்களுக்கான உறுப்புரிமை வர்த்தமானி அறிவித்தலின்படி ஜுன் மாதம் 02 ஆம் திகதி கிடைத்துள்ளது.

 கிழக்கு மாகாணத்தில் போதுமான அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் தொங்கு நிலையில் 30 சபைகள் உள்ளன .
அம்பாறை மாவட்டத்தில் 12 சபைகளும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் தலா 09 சபைகளும் இவ்விதம் உள்ளன.

அச் சபைகளுக்கான தவிசாளர் உப தவிசாளர்  தெரிவானது  எனது தலைமையில் அந்தந்த சபைகளில் மேற்குறித்த அறிவிப்பின் பிரகாரம் நடைபெறும் . என்றார்.

அதன் படி காரைதீவு பிரதேச சபை மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபைக்கான தெரிவுக் கூட்டங்கள் எதிர்வரும் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளன.
 
 
 ( வி.ரி.சகாதேவராஜா)