தென்னாபிரிக்க தூதுவரை சிவஞானம் சிறிதரன் சந்தித்தார்

 


இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் சாண்டில் எட்வின் ஷால்க், துணைத் தூதுவர் றெனி எவர்சன் வர்ணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க தூதரகத்தில் நடைபெற்றுள்ளது.

நேற்று புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடு மற்றும் தமிழ் பொது வேட்பாளர் குறித்த சாதகத் தன்மைகள் குறித்தும், ஈழத்தமிழர்கள் சார்ந்த அரசியல் முன்னெடுப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள தென்னாபிரிக்கா, ஈழத்தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப் படுகொலைக்கும் சர்வதேச நீதியைப் பெற்றுத்தர முயற்சிக்க வேண்டும் என்றும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரிலும் இதுவிடயம் சார்ந்து தங்களின் கரிசனையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தென்னாபிரிக்கத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.