மட்டக்களப்பு ஆயித்தியமலை சதாசகாயமாதா திருத்தல திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்.


 





















வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஆயித்தியமலை சதாசகாய மாதா  திருத்தலத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு  மறை மாவட்ட ஆயர் கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகை  தலைமையில் மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில்  (19) திகதி இடம் பெற்றது.

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி முதல்  செப்டம்பர்  08ஆம் திகதி வரை ஆயித்தியமலை  புனித சதாசகாயமாதா திருத்தலத்தின் திருவிழா இடம்பெறவுள்ளதனால்   விழாவிற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது.

பெருவிழா கூட்டுத் திருப்பலியினை  மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதி வந்தனைக்குரிய  கலாநிதி பொன்னையா யோசப் ஆண்டகைபினால் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

 முதல் திருப்பலியானது காலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

திருவிழாவிற்கான பாதயாத்திரை எதிர்வரும் செப்டெம்பர்  07 திகதி காலை 5 மணிக்கு புளியந்தீவு  புனித மரியாள் பேராலயத்தில் திருப்பலியைத் தொடர்ந்து வவுணதீவினுடாகவும் மற்றும் செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயத்தில் காலை 5 மணி திருப்பலியைத் தொடர்ந்து கரடியனாறு ஊடாகவும் திருத்தலம் சென்றடையவுள்ளது.   

இதன் போது திருவிழாவிற்கான போக்குவரத்து, சுகாதாரம், குடிநீர் மற்றும் பாதுகாப்பு, மின்சாரம் வழங்கள் போன்ற விடங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வின் போது  புனித  சதாசகாய மாதா திருத்தல நிருவாகி  அருட்தந்தை ஜெரிஸ்டன் வின்சன்ட்,மண்முனை மேற்கு  பிரதேச செயளாலர் நமசிவாயம் சத்தியானந்தி, உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன்   , பொலிஸ் உயர் அதிகாரிகள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் , சுகாதார அதிகாரிகள், மற்றும் உயரதிகாரிகள் என பலர் கலந்து கொண்டார்கள்.