குறிப்பிட்ட ஒரு செல்வந்த வர்க்கத்தினை பாதுகாக்கின்ற பொருளாதாரம் முறை ஒன்றே தற்போது நாட்டில் காணப்படுகின்றது. IMF ஒப்பந்தம் மூலமும் தொழிலாளர் வர்க்கத்தின் ETF, EPF பணங்களை கொள்ளையடித்து முதல் தர பணக்காரர்களை பாதுகாத்து வரும் ஆட்சியே நாட்டில் காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக இருந்தால் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களே முதலில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். நாட்டின் தலைவரே அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். மக்களின் மீது வரிச் சுமையை சுமத்திக் கொண்டு செல்கின்றார்.
IMF குறிப்பிட்டதால்தான் அப்படி செய்கிறோம் என்பதை பதிலாக ஜனாதிபதி குறிப்பிட்டாலும் அது மக்களை ஏமாற்றுகின்ற கருத்தாகும். IMF ஒப்பந்தத்தில் அவ்வாறான ஒரு விடயமும் குறிப்பிடப்படவில்லை. அரசாங்கம் மக்களை அசௌகரியத்திற்குட்படுத்த முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாவலப்பிடி பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடு சீரழிந்து இருக்கின்ற சந்தர்ப்பத்தில் தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் பங்காளர்கள் பொருளாதார செயற்பாடுகளை தமது நண்பர்களிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். நாட்டின் விரிவான பொருளாதார வளர்ச்சி ஒன்றை உருவாக்கி அதன் பிரதி பலனை அனைத்து மக்களுக்கும் பெற்றுக் கொடுக்கக் கூடிய பொருளாதார யுகம் ஒன்றை கட்டியெழுப்புவேன் என்றார்.
அநீதி, திருட்டு, ஊழல் மற்றும் மோசடி என்பன ஆட்சி செய்கின்ற இந்த காலத்தில் சாதாரண சமூகம் ஒன்றில் நீதி நியாயம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, அனைவருக்கும் பொதுவான பொருளாதாரப் பிரதிபலனை பெற்றுக் கொள்ளக்கூடிய ஆட்சி யுகம் ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதுள்ள பொருளாதாரக் கொள்கையினால் நாட்டில் அரைவாசிக்கும்
மேற்பட்டோர் ஏழைகளாக மாறியிருக்கிறார்கள். அந்த ஏழ்மையை போக்குவதற்காக
ஜனசவிய திட்டத்தை விட வலு உள்ள திட்டங்களை ஐக்கிய மக்கள் சக்தி
நடைமுறைப்படுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு
சுட்டிக்காட்டினார்.