தமிழரசுக் கட்சியில் இருக்கிற என்னுடைய அருமை மாணவன் பலவிதமான தகைமைகளைக் கொண்டிருந்தாலும் தமிழ்த் தேசிய உணர்ச்சி அவருக்கு இல்லை. அவர் எல்லாவற்றையும் மூளையினால் பார்ப்பாரே ஒழிய உணர்வினாலோ உணர்ச்சியினாலோ பார்க்க கூடியவர் அல்லர் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய மகாநாட்டிற்கு தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை அழைத்திருக்கிற நிலைமையில் எதிர்காலத்தில் அவருடன் சேர்ந்து பயணிப்பதற்கு சாத்தியங்கள் இருக்கிறதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
யாழில் சனிக்கிழமை(20 ) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..
தமிழ்தேசிய கட்சிகள் என்ற முறையிலும் தமிழ்த் தேசிய உணர்வுகளை கொண்டவர்கள் என்ற முறையிலும் எங்களுக்கும் சிறிதரனுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது.
இந்த விதத்திலே என்னுடைய அருமை மாணவன் பலவிதமான தகைமைகளைக் கொண்டிருந்தாலும் தமிழ்த் தேசிய உணர்ச்சி அவருக்கு இல்லை. அவர் எல்லாவற்றையும் மூளையினால் பார்ப்பாரே ஒழிய உணர்வினாலோ, உணர்ச்சியினாலோ பார்க்கக் கூடியவர் அல்லர்.
அந்த விதத்தில் தமிழரசுக் கட்சியினுடைய தலைவராக சிறிதரன் வருவதைத் தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதனையே வரவேற்கின்றோம்.
ஆனால் இதுரை காலமும் தமிழ்த் தேசியத்திற்கு குரல் கொடுத்து வருகின்ற ஒருவர் என்ற முறையிலே அவரை நாங்கள் அழைத்திருக்கின்றோம். அதேபோன்று தான் பேராசிரியர் கணேசலிங்கத்தையும் அழைத்திருக்கிறோம்.
ஆகவே, தமிழ்த் தேசியத்தின் அடிப்படையிலே நாங்கள் முற்செல்ல வேண்டும் என்பதால் அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை என்றார்.