(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு - வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று புதன்கிழமை (19) முதல் தொடர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் தங்களின் ,
"மாதாந்த இழப்பீட்டுத் தொகையை அதிகரி", "பயனுள்ள ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தி, பல்கலைக்கழக சமூகத்திற்குப் பொதுக் காப்புறுதி முறைமையை நடைமுறைப்படுத்தி, ஏற்றுக் கொள்ளப்பட்ட 107% சம்பளம் அதிகரிப்பை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு வழங்கு"
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பாக கொட்டகை அமைத்து சத்தியாகிரக போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
இப்போராட்டத்தில் சுமார் 30 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தவை வருமாறு:-
நாங்கள் இன்று சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
எமது கோரிக்கைகள் 6 வருடமாக இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில்
கோரிக்கைகள் வெற்றி பெறும் வரை எமது போராட்டம் தொடரும்.
இவ்வாறான நிலையில் அரசாங்கம் ஒரு அருத்தையும் அமைச்சர் ஒரு கருத்தையும் இராஜாங்க அமைச்சர் ஒரு கருத்தையும் குழுக்கள் அமைத்து வெளியிடுகின்றனர். ஆனால் எமக்கு எந்தத் தீர்வும் இல்லை.
ஜனாதிபதி இதைக் கருத்திற் கொள்ள வேண்டும்.
ஏனைய உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு சம்பளம் வழங்க பணம் உள்ளது. எமக்கு வழங்க பணம் இல்லை என்று சாட்டுச் சொல்கின்றனர். இதே வருடத்தில்தான் அவர்களுக்கு சம்பளம் வழங்கியுள்ளனர் என்றனர்.