பொசன் போயவை முன்னிட்டு மிஹிந்தலைக்கு வரும் பக்தர்களுக்காக எவ்வித
கட்டணமும் அறவிடப்படாமல் இன்று (17) முதல் விசேட புகையிரத சேவையை ஆரம்பிக்க
ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த சிறப்பு ரயில்கள் அனுராதபுரம் - மிஹிந்தலை இடையே சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பில் இருந்து மஹவ நோக்கி ரயிலில் வரும் பயணிகளுக்காக மஹவ
புகையிரத நிலையத்தில் இருந்து அனுராதபுரம் வரை விசேட பஸ் சேவையை நடாத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு ரயில்வேயின் மஹவ மற்றும் அநுராதபுரம் புகையிரத நிலையங்களுக்கு
இடைப்பட்ட பகுதியில் புனரமைப்புப் பணிகள் நிறைவடையாததால், இவ்வருடம் பொசன்
போயவுக்கு புகையிரதத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பக்தர்களின் வசதிக்காக மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையில் 400
மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலைக்கு இடையிலான புகையிரத பாதை
புனரமைக்கப்பட்டதன் பின்னர், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன
தலைமையில் அநுராதபுரம் புகையிரத நிலையத்தில் இன்று காலை முதல் ரயில் சேவை
ஆரம்பித்து வைக்கப்பட்டது.