பயங்கரவாத தடைச் சட்டம் என்பது சர்வதேச விதி முறைகளுக்கு மேலான ஒரு சட்டம்.புதிய மகசின் சிறைச்சாலையில் 15 வருடங்களுக்கு மேலாக உள்ள
அரசியல் கைதிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.அவர்கள் உடனடியாக விடுதலை
செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற
உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
புதிய மெகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை இன்று புதன்
கிழமை(19) நேரில் சென்று சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
புதிய மகசின் சிறைச்சாலையில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக அரசியல்
கைதியாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மொறிஸ் என
அழைக்கப்படும் கிருபாகரன் உள்ளிட்ட அரசியல் கைதிகளை இன்று(19) புதன்கிழமை
சந்தித்து கலந்துரையாடினேன்.. குறித்த அரசியல் கைதிகள் மிகுந்த மன
உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
பயங்கரவாத தடைச் சட்டம் என்பது சர்வதேச விதி முறைகளுக்கு மேலான ஒரு
சட்டம். அவ்வாறான ஒரு சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று ஐ.நா.மனித
உரிமைகள் பேரவை வழியுறுத்தியுள்ள போதும் இன்று வரை குறித்த சட்டம்
நீக்கப்படாமல் இந்த சட்டத்தின் கீழ் போலியான வழக்குகள் மீண்டும் மீண்டும்
தொடரப்பட்டு வரும் நிலை காணப்படுகின்றது.
கிருபாகரன் மீதும் கடந்த வாரம் புதிய வழக்கு ஒன்று பதிவு
செய்யப்பட்டுள்ளது. கடந்த 29 வருடங்களுக்கு முன்னர் 19 வயதில் கைது
செய்யப்பட்ட நபர்கள் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சுமார் 2 ஆயுள் தண்டனை
காலம் முடிவடைந்துள்ள நிலையிலும் இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
எனவே இவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை என அவர் மேலும் தெரிவித்தார்.