அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாட்டை இடைநிறுத்துங்கள் என
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விடுத்துள்ள கோரிக்கையை ஏற்பீர்களா
அல்லது மறுசீரமைப்புக்களை தொடர்வீர்களா ?நீங்கள் மஹிந்த பக்கமா அல்லது
ரணில் பக்கமா என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல
எம்.பி.மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (13) விசேட கூற்றை முன்வைத்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.,
அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தல்,மறுசீரமைத்தல் என்பதற்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை முழுமையாக இடைநிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸ விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அத்துடன் இந்த நடவடிக்கைகளை தொடருவதா இல்லையா என்பதனை அடுத்த அரசாங்கம் தீர்மானிக்கட்டும் என்வும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.ஆகவே மின்சக்தி அமைச்சர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய செயற்படுவாரா ?அல்லது மறுசீரமைப்புக்களை தொடருவாரா எனக்கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரச நிறுவனங்கள் மறுசீரமைப்பு தொடர்பில் குறிப்பிடவில்லை.மின்சார சபையை தனியார் மயப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது.எனவே மறுசீரமைப்புக்கள் தொடரும் என்றார்.
இதனையடுத்து மீண்டும் எழுந்த லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.,அனைத்து கேள்விகளுக்கும் கேலியாக பதிலளிக்க வேண்டாம்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெளியிட்டுள்ள அறிக்கையில் 'அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வேண்டாம், தற்போது முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை இடைநிறுத்துங்கள்,புதிய மக்களாணையுடன் பணிகளை முன்னெடுக்கலாம்' என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒன்றை கூறுகின்றார். தற்போதைய ஜனாதிபதி இன்னொன்றை கூறுகின்றார். நீங்கள் யார் பக்கம், என்று மின்சக்தி அமைச்சரிடம் கேள்வி எழுப்பிவிட்டு இவர் இடைநடுவில் இருப்பதை அறிவோம் என்றார்.