36 வருட கல்விச் சேவையைப் பூர்த்தி செய்து ஓய்வு பெறுகிறார் அதிபர் திருமதி ஜெஸீமா முஸம்மில்!



(கல்லடி செய்தியாளர்)

மட்/மம/மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 2012.01.26 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை அதிபராக கடமையாற்றி, பாடசாலையின் கல்வி அபிவிருத்தியிலும் பௌதீக வள அபிவிருத்தியிலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் எச்சந்தர்ப்பத்திலும் நேர்மையைக் கடைபிடித்து அனைவரது இதயங்களிலும் நீங்காத இடம் பிடித்த அதிபர் திருமதி ஜெஸீமா முஸம்மில் (SLPS 1) நாளை சனிக்கிழமை (25.)  ஓய்வு பெறுகின்றார்.

இவர் மர்ஹூம்களான மீரா முகைதீன், ஆமினா உம்மா தம்பதிகளுக்கு ஏக புதல்வியாக 26.05.1964 இல் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை மட்/மம/மெத்தைப்பள்ளி வித்தியாலயத்திலும் இடைநிலை,உயர்தர, கல்வியை மட்/மம/ மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யிலும் கற்றார். இவரது பாடசாலை காலத்தில் கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டிலும் மிகவும் திறமையாக செயற்பட்டு ஒரு சிறந்த விளையாட்டு வீராங்கனையாகத் திகழ்ந்தார்.

1985 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, தனது கலைமாணிப் பட்டத்தை பெற்றுக் கொண்டார். 1987 இல் நடைபெற்ற ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கான போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட இவர், 03.10.1988 இல் மட்/மம/ மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நியமனம் பெற்று கடமையைப் ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் 2 1/2 வருட காலம் மட்/மம/அல்ஹிறா வித்தியாலயத்திலும், 2 1/2 வருட காலம் மட்/மம/மீராபாலிகா தேசிய பாடசாலையிலும், தனது கடமையை மேற்கொண்ட போதிலும் தனது 36 வருட சேவை காலத்தில் 31 வருட காலம் மட்/மம/ மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலையிலேயே அரசியல்,வரலாறு பாட ஆசிரியராக,பகுதித் தலைவராக, பிரதி அதிபராக, கடமை நிறைவேற்று அதிபராகக் கடமையாற்றி 2012.01.26 இல் அதிபர்களுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று SLPS - 2 II அதிபராக கடமையை பொறுப்பேற்றார். SLPS-2,  SLPS - 1 அதிபராக பல பதவி உயர்வுகளை பெற்று தான் முதலில் நியமனம் பெற்ற பாடசாலையில் இருந்தே  ஓய்வு பெற்றுச் செல்வது தனிச்சிறப்பாகும்.

1998 இல் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் டிப்ளோமாப் பட்டத்தை முடித்து அதில் விஷேட  சித்தி பெற்றதன் காரணமாக அப்பல்கலைக்கழகத்தில் முதன்மை ஆசிரியராக, பகுதி நேர போதனாசிரியராக, Tutor ஆக 14 வருடங்கள் கடமையாற்றினார்.

இவ்விதமாகத் தனது சேவைக் காலத்தை மாணவர்களை முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த  திருமதி ஜெஸீமா முஸம்மில்லது ஓய்வு காலம் சிறப்பாக அமைய கல்விப் புலம் சார்ந்து பிரார்த்திப்போமாக!