(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு மாவட்ட வெசாக் விழாவானது மங்களகம ஸ்ரீதர்மாராமய விகாரையில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முதரளிதரன் தலைமையில் இன்று வியாழக்கிழமை (23) இடம்பெற்றது.
இதன்போது வணக்கத்திற்குரிய மங்களகம ஸ்ரீதர்மாராமய விகாராதிபதி சந்திர ரட்ணயகிமி தேரரினால் விசேட பூசை வழிகாடுகள் நிகழ்த்தப்பட்டன.
புத்தரின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் பரிநிர்வாணமடைதல் ஆகிய நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் நோன்மதி தினம் பௌத்த மக்களின் மிகவும் புனிதமான நாளாகும்,
இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் வெசாக் விழா இடம் பெற்று வரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்ட செயலகமும், ஏறாவூர்பற்று பிரதேச செயலகமும்
இணைந்து 2024 ஆம் ஆண்டின் வெசாக் விழாவை மங்களகமயில் ஏற்பாடு செய்திருந்தனர்.
புனித வெசாக்கினை முன்னிட்டு பௌத்த சாசன பூஜைகள், பக்தி பாடல் இசைத்தல், அதிதிகளினால் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி பயன் தரு மரங்களும் நடப்பட்டது.
இதன் போது வழிபாடுகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அரசாங்க அதிபர் தலைமையிலான அதிகாரிகளினால் அன்னதானம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம்.எஸ். பசிர்,பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி காயத்திரி, ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன்,
பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், உதவி பிரதேச செயலாளர், நிருவாக உத்தியோகத்தர், மாவட்ட, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இவ் வருட வெசாக் உற்சவமானது மே மாதம் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரையிலான ஒரு வார காலம் மாத்தளையில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



















