நீண்ட சட்டப் போராட்டத்திற்கு வெற்றி; இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் பெண்ணுக்கு வாக்குரிமை

 


இந்தியாவில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை பெண் ஒருவருக்கு, நீண்ட சட்டப் போராட்டத்தின் பின் இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

38 வயதான நளினி கிருபாகரன், தனது கனவு நனவாகியிருப்பதாகவும் தற்போது தான் ஒரு இந்தியன் என்பதை உறுதி செய்துள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் கோட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு முகாமில் தங்கியிருக்கும் நளினி கிருபாகரன், கடந்த 1986 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் முகாமில் பிறந்துள்ளார்.

இந்த வாரத் தொடக்கத்தில் நளினிக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்துள்ளது. இந்த உரிமை, தன்னுடன் முகாமில் தங்கியிருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்.

அத்துடன், இந்தியாவில் பிறந்த தனது இரண்டு பிள்ளைகளுக்கும் இந்திய குடியுரிமை பெறுவதற்காக போராடிக்கொண்டிருப்பதாகவும் நளினி குறிப்பிட்டுள்ளார்.