காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் வகையிலான விசேட திட்டம் ஒன்று இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.








சஜித்நாத்


நியுசிலாந்தின் வெளிநாட்டு அமைச்சின் நிதியுதவியின் கீழ் சிறுவர் நிதியத்தின் ஊடாக யுனிட்டி லங்கா அமைப்புடன் இணைந்து இந்த திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் மற்றும் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் சிறுவர் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி செல்;வி ஆடித் ஹோஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜி.ஜி.முரளிதரன் கலந்துகொண்டதுடன் சிறுப்பு அதிதிகளாக சிறுவர் நிதியத்தின் வியாபார அபிவிருத்திக்கான பணிப்பாளர் டினன்த தம்பாவிற்ற,கிரான் பிரதேச செயலாளர் க.சித்திரவேல்,புனானை 23வது படைப்பிரிவின் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல்  நிலாந்த பிரேமரத்ன,முல்லைதீவு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் கே.விமலநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மாற்றமடைந்துவரும் காலநிலையிலிருந்து மிகவும் வறிய நிலையில் உள்ள சிறுவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஊடாக குளங்கள் அபிவிருத்திசெய்யப்படுவதுடன் சிறுவர்களுக்கான சுத்தமான குடிநீரை உறுதிப்படுத்தல்,சுகாதாரத்தினை உறுதிப்படுத்தல்,பாடசாலை மாணவர்களின் தேவைகளை உறுதிப்படுத்தல் என பல்வேறு வேலைத்திட்டங்கள் இதன்மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேச செயலகப்பிரிவுகளான கிரான் மற்றும் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுகள் இதன் கீழ் தெரிவுசெய்யப்பட்டு காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப சிறுவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.